வாடகை கேட்டதால், ஓட ஓட விரட்டி கொலை-பீதியில் உரிமையாளர்கள்..!

         -MMH


வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளரை வாடகைதாரர் ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர் குன்றத்தூர், பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித்(21), என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.


ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகையை அஜித் குடும்பத்தினர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு அஜித் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் பெற்றோர் சம்பவத்தை கூறியதையடுத்து இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார்.



குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி குணசேகரனை கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் இறந்து போன குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அஜித்தை கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் வாடகை தார்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என தமிழக அரசும், நீதிமன்றமும் தெரிவித்திருந்த நிலையில் வீட்டின் உரிமையாளரை வாடகைதாரர் ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பீதி மற்றும்   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


-கிரி,ஷபி,சென்னை.   


Comments