சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் சண்டிக்கீரையாம்...!!

     -MMH


சிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும் உப்புச்சத்து இரத்தத்தில் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள், கால் மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு பலர் ஆளாகுகிறார்கள்.


சிறுநீர் சரியாகச் செல்லாவிட்டால் முறையான சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் சிறுநீர் தேங்காமல் சரிசெய்து கொள்ள வேண்டும்.


இல்லாவிட்டால் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகிவிடும். சிறுநீரைப் பெருக்கக்கூடிய, உடல் வீக்கத்தை வற்றக்கூடிய அற்புதமான கீரை சண்டிக்கீரை.


சண்டி மரத்தின் இலைகளில் உள்ள வேதிச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள உப்புகளை வெளியேற்றி, சிறுநீரைப் பெருக்கி கால்களின் வீக்கத்தைக் குறைக்கின்றன.


பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளியைத் தாளிதம் செய்து அத்துடன் மசித்த பாசிப்பருப்பைச் சேர்த்து, லேசாக வதக்க வேண்டும்.


பின் காம்பு, நரம்பு நீக்கிய சண்டிக்கீரையைக் கலந்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து, கீரை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


இதனை அடிக்கடி மதிய உணவுடனோ அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொண்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.


சண்டி இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் நன்கு வெளியேறும்.


எலும்பு மச்சை தேய்மானம் ஏற்படும்போது அதில் உள்ள சவ்வு சிதைந்துவிடும். இதனால் மூட்டு வலி ஏற்படும்.


அதேபோன்று பனி காலங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி தொல்லையால் சிரமப்படுகின்றனர்.


இரத்தத்தில் உள்ள கழிவுகள் நுரையீரலில் தங்குவதால் தொடர் இருமலும், சளித் தொந்தரவும் ஏற்படுகிறது.


மூட்டு வலி மற்றும் இருமல், சளித் தொந்தரவை அகற்றும் சக்தி சண்டிக்கீரையில் அதிக அளவில் உள்ளது.


இதில் உள்ள நார் மற்றும் இரும்புச் சத்து எளிதாக நிவாரணத்தை வழங்கும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாவதோடு, சளி, இருமல் தொந்தரவும் ஏற்படாது.


-Ln. இந்திராதேவி, சோலை.


Comments