1000 கோடிகள் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் - உயர் நீதிமன்றம் வேதனை!

-MMH

ரூ.1000 கோடி கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஃபெடரல் பாங்க்)  நீண்ட கால கடனாக ரூ.50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக ரூ.15 லட்சம் விவசாய நிலங்களை அடமானம் வைத்துக் கடன் பெறப்பட்டது. 

இதில் வீட்டுக் கடனுக்காக ரூ.18 லட்சமும் நீண்ட கால கடன் தொகையில் ரூ.25 லட்சமும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தொழில் நிலைமை சரியில்லாததால் வங்கியில் சரிவர பணம் கட்ட முடியாத காரணத்தினால் எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை தனியார் வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் ரூ.75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ரூ.75 லட்சத்திற்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள தனியார் வங்கி மேலாளரிடம் கொடுப்பதற்காக அக்டோபர் 7ஆம் தேதி வங்கிக்கு சென்றபோது வங்கி மேலாளர் அதனை வாங்க மறுத்து மனுதாரர் மீது வீசி எறிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிற வேளையில், விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க கோரியும் தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாய மற்றது என தெரிவித்த நீதிபதிகள், எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், தனியார் நிறுவனங்களை குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம் என்றும் நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.

1000 கோடிகள் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் பணம் வசூல் என்ற பெயரில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி, வரைவு காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments