கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை! - தலைமைச் செயலாளர் கோவையில் பேட்டி...!

     -MMH


கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை...!! அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்; தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி.
கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியதாவது; கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம்.


அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்; தொற்று குறைந்தால் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகள் தரப்படும். தனிமைப்படுத்துதலை மீறுபவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளில் கொரோனா குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் இருந்து வருகின்றனர். நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே கோவையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.


-மைதீன்.


Comments