நிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்!

 

-MMH

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து மாற்று நுரையீரல் எடுத்துச்செல்ல முடியாததால், கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் சுபம் உபத்யாய் (வயது 30). இவர் கடந்த ஒரு மாத காலமாக கோவிட்-19 நோய்த் தொற்றுடன் போராடி வருகிறார். கொரோனாவால் அவரது நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சுபம் உபத்யாய்க்கு அக்டோபர் 28ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் போபாலில் உள்ள சிராயு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

நவம்பர் 10ஆம் தேதி முதல் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. அவரது நுரையீரலில் 96 விழுக்காடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நுரையீரல் எடுத்துச்செல்லப்பட இருந்தது. ஆனால் நிவர் புயல் காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், நுரையீரலை போபாலுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

இருந்த ஒரு நம்பிக்கையும் நிவர் புயலால் அழிந்துபோன நிலையில், இன்று சுபம் உபத்யாய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

- பாரூக் சிவகங்கை. 

Comments