மழையில் நனைந்த எடப்பாடி!! - நனைந்த படியே பேட்டி!!

-MMH 

செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையில் முதல்வர் சொட்டச்சொட்ட நனைந்தபடி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடிக்கு அதிகமாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், சூழ்நிலையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 19 மதகுகள் உள்ள நிலையில் 7 மதகுகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொட்டும் மழையில் குடைப்பிடித்தவாறு ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து குறித்தும், மதகுகளின் உறுதித்தன்மை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு மழையில் நனைந்தபடி செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார்.

செம்பரம்பாக்கத்தைத் தொடர்ந்து புயல் நிவாரண முகாம்களையும் முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகளை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

-ஸ்டார் வெங்கட்.

Comments