தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவது குறித்த மனு - உயர் நீதிமன்றம் உத்தரவு!!

     -MMH

    தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனு; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்ட போதும், தொன்மையான தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக டிஜிபி, காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை இன்று (டிச. 17) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு மனுவுக்கு மார்ச் 29-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

-பாலாஜி தங்க மாரியப்பன், சென்னை போரூர்.

Comments