ப்ளீஸ், என்னை விட்ருங்க! அரசியலுக்கு வரவே மாட்டேன்! - மீண்டும் சொன்ன ரஜினி!

-MMH

ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் காரணம் காட்டி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையிலும் அவரது ரசிகர்கள் சிலர் எப்படியாவது கட்சி தொடங்கிவிடமாட்டாரா என எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ரஜினியின் உடல்நிலை கடந்த மாத இறுதியில் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய போதும் மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அதை சரியாக கடைபிடிக்க வலியுறுத்தியிள்ளனர். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமல்ல அரசியல் தொடர்பான செய்திகளைப் பார்த்தாலே ரஜினியின் ரத்த அழுத்தம் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் இதிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ நேற்று (ஜனவரி 10) வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments