மீன் குழம்பு வைக்காத மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்!

-MMH

      காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாண்டி (62). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி கண்ணகி (53). பாண்டி மதுப்பழக்கம் உடையவர். ஒராண்டிற்கு முன்பு பெற்ற தாயை கொன்றுவிட்டு சிறைசென்று ஜாமீனில் வெளியே வந்தவர் பாண்டி. தற்போது மீன்குழம்பு வைத்து தராத மனைவியை கோடரியால் வெட்டிவிட்டு மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார்.

முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவி கண்ணகியுடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு 21 வயதில் நாகேஷ்வரன் மற்றும் 15 வயதில் ஒரு மகன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே முதல் மனைவியின் மூக்கையும் காதையும் அறுத்த வழக்கும் இவர் மீது உள்ளது.

அத்துடன், மதுபோதைக்கு அடிமையான பாண்டி கடந்த 2019 ஆம் ஆண்டு மதுகுடிக்க பணம் கொடுக்காத தாயை அடித்துக்கொன்று விட்டு சிறைசென்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, வழக்கம் போல் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார் பாண்டி. அப்போது வீட்டுவாசலில் உள்ள அம்மிக்கல்லில் கண்ணகி தேங்காய்சட்னி அரைத்துள்ளார். அதை பார்த்த பாண்டி 'உன்னை மீன்குழம்புதானே வைக்க சொன்னேன்' என்று ஆத்திரத்தில் திட்டியுள்ளார். ஒருகட்டத்தில் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாண்டி திடீரென மதுபோதையின் உச்சத்தில் வீட்டில் இருந்து கோடரியால் மனைவி கண்ணகியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் உச்சந்தலை உடைந்த நிலையில் கண்ணகி சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ணகியை மீட்டு காரைக்குடி அரசுமருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள கண்ணகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருகில் இருந்த கிணற்றில் இருந்து மனைவியை வெட்ட பயன்படுத்திய கொடரியை கைபற்றியுள்ளனர். மீன்குழம்பு வைக்காத மனைவியை குடிகார கணவன் கொடரியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments