திமுக - கோட்டையைப் பிடிக்குமா, கோட்டைவிடுமா? பாஜகவின் அண்டர்கிரவுண்ட் வேலைகள்!

-MMH

     மிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிகாரத்திற்கு வர வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் திமுகவின் வெற்றியைத் தடுக்க, பாஜக மூன்று முக்கிய திட்டங்களைத் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாஜக தனது கட்சியினர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பதைவிட, திமுக ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக பல்வேறு திட்டங்களை ரகசியமாக தீட்டி வருகிறது. கடந்த இரு தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க தவறிய திமுக, இந்த முறை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதைத் தடுக்க பாஜக வைக்கும் கண்ணிகள் என்னென்ன தெரியுமா?

பாஜக அஜண்டா இதுதான்!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு மாநிலங்களிலும் தங்களது கட்சியை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதே சமயம் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறதோ, அங்கு அதன் வாக்கு வங்கியை சரித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்வதும் பாஜகவின் முக்கிய அஜன்டாவாக உள்ளது.

அமித் ஷா நடத்திய ஆபரேஷன்!

அந்தவகையில் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏவும் பாஜகவில் ஐக்கியமாகி காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இப்படியொரு அரசியல் ஆபரேஷனை டெல்லியிலிருந்து நடத்தியது அமித் ஷா என்கின்றனர், விவரம் அறிந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் இது தமிழகத்தில் நடக்கவிருக்கும் மற்றொரு ஆபரேஷனின் முன்னோட்டம் என அழுத்தமாக கூறுகின்றனர்.

திமுகவுக்கு போடும் ஸ்கெட்ச்!

“சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஒரு ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் அமித் ஷாவுக்கு சென்றுள்ளது. இதனால் திமுகவுக்கு செல்லும் வாக்குகளை எப்படி தடுப்பது, மடை மாற்றி விடுவது என்பது குறித்து புதிய திட்டங்களை அவர் வகுத்துள்ளார். நன்றாக விற்பனை நடைபெறும் கடையின் அருகிலேயே சிறிய கடைகள் முளைத்தால் ஏற்கெனவே இருக்கும் கடையின் விற்பனை குறையும் அல்லவா, அந்த யுத்தியைத்தான் அமித் ஷா கையாளப் போகிறார்” என்கிறார்கள்.

கோட்டைவிடுமா, கோட்டையை பிடிக்குமா திமுக?

2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, இடது சாரிகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எந்தத் தொகுதியிலும் இந்தக் கட்சிகள் வெற்றி பெறாவிட்டாலும் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்தன. இதனால் திமுக வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது. கோட்டையைப் பிடித்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் 1 சதவீதம் மட்டுமே. பாமக ஒரு பக்கம் தனியாக நின்று தனது பங்குக்கு வாக்குகளை இழுத்தது.

தினகரன் பாஜகவின் ஆயுதமா?

திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அமித் ஷா அண்ட் கோ, மக்கள் நலக் கூட்டணி போல பல அணிகளை உருவாக்க முயற்சித்து வருகிறது. சசிகலா சென்னை வந்த நிலையில் அதிமுக -அமமுக இணைப்பு பணிகள் வேகமெடுக்காததற்கும் இதுதான் காரணம் என்கின்றனர். தினகரனின் அமமுக தலைமையில் ஒரு அணியை அமைத்து, அதன் மூலம் வாக்குகளை பிரிக்க முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.

கைவிட்ட ரஜினி, கை கொடுப்பாரா கமல்?

அதேபோல் கமல்ஹாசன் தலைமையில் ஒரு அணி அமைந்து சிறு சிறு கட்சிகளை அவர் பக்கம் தள்ளிவிட்டால் ஆளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். திமுக சார்பாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் என திரைமறைவில் நடைபெற்றதை கமல் செய்தியாளர்களிடம் போட்டு உடைத்ததையும் பாஜக ரசித்திருக்கும். ரஜினி வந்து பெரியளவில் வாக்குகளைப் பிரிப்பார் என கணக்கு போட்ட பாஜக, அது நடக்காமல் போகவே கமலை எதிர்பார்த்துள்ளது.

மீண்டும் அழகிரியை உசுப்பிவிடும் பாஜக!

அதேபோல் அழகிரியிடமும் மீண்டும் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ‘கலைஞர் திமுக’ என்ற கட்சியை தொடங்குங்கள் என்ற அழுத்தம் அழகிரிக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. அழகிரி கட்சி தொடங்கும் முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்காத நிலையில் அவரது ஆதரவாளர்கள் திமுக பக்கம் சென்று கொண்டிருந்த நிலையில் பாஜகவின் இந்த அழுத்தத்துக்கு அழகிரி என்ன ரியாக்ட் செய்ய உள்ளார் என்பதும் கவனத்துக்கு உரியது.

என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஓரிரு ஆயிரம் வாக்குகள் பிரிந்தாலே வெற்றி வாய்ப்பு, கை மாறிவிடும். அந்த வகையில் அந்தத் தொகுதிகளில் பரிச்சயமான அமைப்புகள், சிறு சிறு கட்சிகளையும் களத்தில் இறங்கச் சொல்லி பாஜக சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக அதற்காக முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு என்ன மாதிரியான எதிர்வினைகளை அவர் ஆற்றப்போகிறார், பாஜக வலையில் வீழ்வாரா, சூழ்ச்சியை முறியடித்து கோட்டையைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-பாரூக்.

Comments