போக்குவரத்து நெரிசலில் தத்தளித்த சென்னை அண்ணாசாலை!
அலுவலகம் செல்லக்கூடியவர்கள் தொடங்கி தங்களுடைய வீடுகளுக்கும் , கடைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்லக்கூடிய நபர்கள்வரை நாடக் கூடிய முக்கியமான சாலையாக அண்ணாசாலை திகழ்ந்து கொண்டிருக்கிறது, அப்படிப்பட்ட அண்ணா சாலையின் தேனாம்பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்றைய தினம் காலை முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விண்ணப்படிவம் வழங்கப்படுவதை ஒட்டி அதனை பெறுவதற்காக தமிழகத்தினுடைய பல்வேறு பகுதியில் இருந்து திமுகவினர் தங்களுடைய கார்களிலும் , வேன்களிலும் வந்தவர்கள் ஆங்காங்கே சாலை ஓரமாக வண்டியை விட்டு சென்றதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டது .
இதனால் அண்ணாசாலையின் வழியாக வேலைக்கு சென்ற சாமானிய மக்கள் முதல் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்சில் சென்றவர்கள் வரை நெரிசலில் சிக்கித் தவித்தனர். ஒரு சில கிலோமீட்டர் செல்வதற்காக வழமையாக ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு உள்ளாக செல்ல வேண்டிய தூரங்களை 1 மணி நேரமாக நின்று கடந்தனர்.
இத்தகைய நெருக்கடிகள் இனி வரக்கூடிய நாட்களிலும் தொடராமல் இருந்திட போக்குவரத்து காவலர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நலம். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-நவாஸ்
Comments