வர்க்கப் போராளியாகவே வாழ்ந்த தா.பாண்டியன் மறைந்தார்!

 

-MMH

     மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா. பாண்டியன் (18.5.1932). காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற தா. பாண்டியன், உசிலம்பட்டி போர்டு உயர் நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

தா.பாண்டியனின் மனைவி பெயர் ஜாய்சி. அவருக்கு ஜவஹர் என்ற மகனும் அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட்டில் சேர்ந்தபோதே (1953) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்துவிட்டார் தா.பாண்டியன். பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்த அவர், கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார்.

சென்னையில் சட்டம் படித்த அவர் 'ஜனசக்தி'யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவது என்று அப்போது படுபிஸியாக இருந்தார். 'திருமணமான புதிதில் மனைவிக்குப் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டதுபோதும் என்று 2012இல் மறைந்துவிட்டாள். தற்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கண்ணீருடன் கடனைத்தீர்க்கிறேன்' என மனைவியின் இறப்பு குறித்து உருக்கமாகத் தெரிவித்தார், பாண்டியன்.

டாங்கே, கல்யாணசுந்தரம் உள்ளிட்டத் தலைவர்களின் துணையுடன் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தா.பாண்டியன் 1983 முதல் 2000ஆம் ஆண்டு வரை, அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். இரண்டு முறை வடசென்னை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆவது ஆண்டில், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார்.

2005இல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை மாநிலச் செயலாளராக அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசின் விருது வழங்கும் விழாவில் விருதைப் பெற்று நன்றி உரையாற்றிய தா. பாண்டியன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை முதன்முதலில் பொதுவெளியில் 'அம்மா' என்று அழைத்தார். அதனைத்தொடர்ந்து அதிமுகவினர் ஜெயலலிதாவை 'அம்மா' என அழைக்கத் தொடங்கினர். விழா முடிந்து வீட்டுக்குச் சென்றதும் தா.பாண்டியனை தொடர்புகொண்டு, அம்மா என அழைத்தமைக்கு நன்றி தெரிவித்தார், ஜெயலலிதா.

சிறந்த மொழிபெயர்ப்பாளரான தா.பாண்டியன், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்துள்ளார். 1991 மே 21இல் நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது, அவருக்குப் பின்னால் இருந்த தா.பாண்டியனும் தூக்கி வீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது.

காவல் துறை அதிகாரிகளும் வீட்டுக்குப் போன் செய்து பாண்டியன் இறந்ததாகத் தெரிவித்துவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்

தா.பாண்டியன். ஆரம்ப காலத்தில் 'சவுக்கடி' என்ற புனைபெயரில் எழுதிவந்த தா.பாண்டியன், 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்தார்.

13 சிறுவெளியீடுகள், 8 நூல்கள்,

6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார் தா.பாண்டியன். 'மேடைப்பேச்சு', 'பொதுவுடைமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை! இந்தச் சூழலில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தா. பாண்டியன் இன்று காலமானார்.

தற்போது அவரது உடல் சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments