தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து அறிமுகம்! இனி பெட்ரோல், டீசலுக்கு டாட்டா!

-MMH

             மிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலால் இயக்கப்படுகிறது. இதில் வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தற்போதுள்ள வாகனங்களில் சிறியளவு வடிவமைப்பை மாற்றினால், எல்.பி.ஜி., எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும். அதேசமயம், சி.என்.ஜி. எனப்படும் கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாய்வு காய்கறிகள் கழிவு, தாவரங்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், பெரிய அளவில் இன்ஜின்களை மாற்றம் செய்தால் மட்டுமே பஸ், லாரிகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக ராசிபுரத்தில் தனியார் பேருந்தில் சி.என்.ஜி. கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் இருந்து சேலம் வரை செல்லும் இந்த பஸ்சில், பயோ கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பேருந்து சோதனை ஓட்டம் மட்டுமே முடித்துள்ளது. விரைவில் தமிழகத்தின் முதல் பேருந்தாக சேலம்-ராசிபுரத்திற்கு தனது பயனத்தை தொடங்கவுள்ளது.

டீசல் லிட்டர், 87 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டர் ரூ. 90 ரூபாய்க்கு மேலும் உள்ளது.ஆனால், சி.என்.ஜி கேஸ் ரூ. 56 க்குதான் விற்கப்படுகிறது. மைலேஜ் இரண்டும் ஒரே அளவுதான் கிடைக்கிறது. இதனால், 40 சதவீதம் வரை செலவு மீதியாகிறது. சி.என்.ஜி. கிட் பஸ்சில் டீசல் டாங்கை நீக்கிய பிறகு, தலா 13 கிலோ கொள்ளளவு கொண்ட எட்டு சிலிண்டர்கள், ஒரு பக்கத்திற்கு 4 வீதம் பஸ்ஸில் பொருத்தப்படுகிறது. பம்பு, நாசில்கள் நீக்கப்பட்டு, திறன் கொண்ட ரேடியேட்டர் மற்றும் பிரத்யேகமான பிஸ்டன்கள் பொருத்தப்படுகின்றன.

ஆரம்பகட்ட பிக்கப் சற்றே குறைவாக இருந்தாலும் வேகமெடுத்த பிறகு வித்தியாசம் தெரிவதில்லை எனக் கூறப்படுகிறது. சிஎன்ஜி கிட்டிற்கு சுமார் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகிறது. பயோ கேஸ் பயன்படுத்துவதால் சத்தம், புகை குறைவாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments