செவிமடுக்காத அதிமுக அரசு! திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன்!!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், எம்.எல்.ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அங்கிருந்து அவர், என்.வைரவன்பட்டி, சமத்துவபுரம் கும்மங்குடி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"4வது முறையாக ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறேன். திருப்பத்தூர் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளேன். கடந்த 2 முறை நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால், எனது கோரிக்கைகளை அதிமுக அரசு புறக்கணித்து விட்டது.
இந்த முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், உங்களது குறைகள் அனைத்தும் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பாஜக அதிமுக அரசை கைப்பாவையாக வைத்துக்கொண்டு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்ததால், திருப்பத்தூர் தொகுதிக்காக நான் வைத்த கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை." எனப் பேசினார்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments