இன்று உலக ஹோமியோபதி நாள்! ஹோமியோபதி மருத்துவம் உருவான கதை!
ஆங்கில மருத்துவம் முழுமையடையாத 18-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி அது. பெயர் தெரியாத பல நோய்கள் மக்களை வதைத்துக்கொண்டிருந்தன. அப்போது ஜெர்மனியைச் சேர்ந்த சாமுவேல் ஹனிமன், நோய்களால் மக்கள் படும் வேதனைகளைக் கண்டு மனம் வருந்தினார். தான் சார்ந்த ஆங்கில மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதைவிட, நோயாளிகளுக்கு அதிக வேதனையைத்தான் தருகிறது என்பதை உணர்ந்து சிறிது காலம் மருத்துவத்தைவிட்டு ஒதுங்கினார்.
ஹனிமன், ஆங்கில மருத்துவத்தைவிட்டு ஒதுங்கினாலும் சும்மா இருக்கவில்லை. மருத்துவ அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டார். ஸ்காட்டிஷ் அறிஞரான டாக்டர் 'கல்லென்' என்பவர் எழுதிய நூலை மொழிபெயர்க்கும்போது, 'மலேரியாவைக் குணப்படுத்தும் தன்மை சின்கோனா மரப்பட்டைக்கு உண்டு' என்பதை வாசித்தார். இதைத்தொடர்ந்து அனுபவரீதியாக அதை ஆய்வுசெய்ய முடிவுசெய்து, சின்கோனா மரப்பட்டைகளை ஹனிமன் சாப்பிட்டார்.
ஒரு கட்டத்தில் மலேரியா காய்ச்சல் பாதித்தால் என்னென்ன நோய் அறிகுறிகள் வருமோ, அந்த அறிகுறிகள் எல்லாம் அவருக்கு வெளிப்பட்டன. ஆம்... அவரைக் காய்ச்சலும் குளிரும் பாதித்தன. எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும் என்னும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ‘ஹோமியோபதி’ என்ற மருத்துவத்தைக் கண்டறிந்தார். அவர் நினைவாகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ம் தேதி ‘உலக ஹோமியோபதி நாள்’ கொண்டாடப்படுகிறது.
‘ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்’ என்பது டாக்டர் ஹனிமன், தன்னையே சோதனைக்கு உட்படுத்தி, கண்டடைந்த ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நம் மொழியில் `முள்ளை முள்ளால் எடுப்பதுபோல' என்று சொல்லலாம். ஹோமியோபதி மருத்துவம், நோயாளிகளை அணுகும்முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபட்டது.
நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து என்ற முறையில் நோயாளிகளை அணுகக்கூடியது. உதாரணமாக, காய்ச்சல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள் என்னும்போது, மருந்து மட்டும் எப்படி பொதுவாக இருக்கும் என்ற நியதியின்படி ஹானிமன் உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார்.
`உடல் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றையொன்று தீர்மானித்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு சக்தியாக, உடலெங்கும் பரவி ஆளுமை செலுத்தும் ஆற்றலே, உயிராற்றல்' என்று தன்னுடைய `ஆர்கனன் ஆப் மெடிசன்' (Organon of Medicine) என்ற நூலில் ஹனிமன் கூறியிருக்கிறார். தாவரங்கள், விலங்குகள், கனிமங்கள், உலோகங்கள் மற்றும் பாம்பின் விஷம் எனப் பல்வேறு பொருள்களிலிருந்து ஹோமியோபதி மருந்துகளுக்கான மூலக்கூறுகள் பெறப்படுகின்றன. மூலக்கூறுகள் தொடர் செறிவாக்க முறையில் வீரியப்படுத்தப்படுகின்றன.
மூலக்கூற்றை முறைப்படுத்தி `ஆல்கஹால்' (Alcohol) சேர்த்துப் பெறப்படுவதே தாய்த் திரவம். இதன் ஒரு துளி திரவத்துடன் 99 பங்கு நீர் சேர்த்தால் கிடைப்பதே 1சி கரைசல் எனப்படுகிறது. இந்த 1சி கரைசலின் ஒரு துளி நீருடன், 99 மடங்கு நீர் சேர்த்துக் கிடைப்பதே 2சி கரைசல். இப்படியாக மீண்டும் மீண்டும் செறிவூட்டும்போது அதிகம் பயன்படுத்தும் 30சி மருந்தில், மூலக்கூறின் அளவு என்பது இவ்வுலகில் உள்ள ஒட்டுமொத்த நீரில் ஒரு துளி பங்கு மட்டுமே. ஆச்சரியமளிக்கும் இந்த மருத்துவம் பற்றி குறை கூறுபவர்களும் உண்டு. ஆனால், அறிவியல் அறிஞரான ஜாக்ஸ் பென்வெனிஸ்டே, இதை ‘நீரின் நினைவாற்றல்’ என்று குறிப்பிடுகிறார். இதை உறுதிப்படுத்த நானோ அறிவியல், குவாண்டம் இயற்பியல் எனப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
ஹோமியோபதி மருந்து, சர்க்கரை உருண்டையுடன் சேர்த்துக் குலுக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இது, முழுமையான மருத்துவம் என்றும் நோய் தீர்க்கும் ஆற்றல் நிறைந்தது என்றும் நிரூபிக்கப்பட்டது. இதை, 1996-ம் ஆண்டு நடந்த ஹோமியோபதி 200-வது ஆண்டுவிழாவில் ஜெர்மனி மருத்துவத்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீகோபெர் (Horst Seehofer) அறிவித்தார்.
நீர்மமாக்கப்பட்ட ஹோமியோ மருந்தில், மூலக்கூறின் சாரம் இல்லை என்பதே அறிவியலாளர்களின் குற்றச்சாட்டு. ஆனாலும், பென்வென்ஸ்டே குறிப்பிட்டதுபோல நீரின் நினைவாற்றல் என்னும் அடிப்படையில் நானோ துகள் அளவுக்காவது மூலக்கூறு இருப்பதால்தான் அது நோய்தீர்க்கும் விதம் பிரமிக்க வைக்கிறது என்று வாதிடுகின்றனர் ஹோமியோ ஆதரவாளர்கள்.
அதிக அளவில் பேசப்பட்டாலும், அதே அளவு சர்ச்சையையும் சந்தித்த மருத்துவமுறை ஹோமியோபதியைத் தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தொடங்கி பிரிட்டன் மகாராணி விக்டோரியா அரச குடும்பத்தினர்வரை இந்த மருந்தைப் பயன்படுத்தினர்.
இன்றைய சூழலில் உலக அளவில் 200 மில்லியன் மக்கள் ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என உலக அளவில் பரந்து விரிந்துள்ள ஹோமியோபதி மருத்துவமுறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாகும். எளிய, விலை குறைந்த, நிரந்தரத் தீர்வு தரும் இந்த மருத்துவ முறையின் மீதான விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
"எளிமையான மருத்துவ முறை ஹோமியோபதி. தீர்க்க முடியாத பல்வேறு நோய்களுக்கு ஹோமியோபதியில் தீர்வு உள்ளது. மனம் சார்ந்த அறிகுறிகளையும் பொருட்படுத்துவதால் ஹோமியோபதியில் நிரந்தரத் தீர்வு கிடைப்பதுடன் பக்க விளைவுகள் இல்லை. உடல் உறுப்புகள் பாதித்தால் அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு ஹோமியோ மருந்துகள் செயல்படும்.
அறுவை சிகிச்சை, உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி அகற்றப்படும் சூழலில் ஒரு ஹோமியோபதி மருத்துவரிடமும் ஆலோசனை பெறவேண்டும். கிராமப்புற மருத்துவ மையங்களில் ஹோமியோபதி மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் ஹோமியோபதி மருத்துவர்கள்.
மாற்றுமுறை மருத்துவங்களான ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்றவை குறித்த போதிய விழிப்புணர்வு மக்களைச் சென்றடையும்போது பின்விளைவுகளாலும் தொடர் சிகிச்சை முறைகளாலும் உழலும் சிக்கல்களில் இருந்து விடுபட முடியும்.
அனைவருக்கும் உலக ஹோமியோபதி நாள் வாழ்த்துகள்.
- பாரூக், சிவகங்கை.
Comments