சர்ச்சையான அதிமுக விளம்பரம்! ஊடகங்களின் கருப்பு தினமா?
நேற்றைய தினசரி நாளிதழ்களில் அதிமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் எனக் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு உண்மையான செய்திகள் போல இது இருந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் நேற்று அதிமுக சார்பில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில், திமுகவின் கடந்த ஆட்சிக்காலத்தில் அக்கட்சியை விமர்சித்து வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திரிகை செய்திகள் தொகுக்கப்பட்டு விளம்பரமாக கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய செய்திக் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டு, செய்திகள் போலவே தோற்றமளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் "இப்பக்கங்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் பல்வேறு செய்தித் தாள்களிலும் இணைய செய்தித் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டவை. எதுவும் கற்பனை அல்ல" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள், விளம்பரம் என குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருந்ததாலும், நான்காம் பக்கத்தில் மட்டுமே பொதுநலன் கருதி வெளியிடுவோர் அதிமுக என்று கூறப்பட்டிருந்ததாலும், பார்ப்பதற்கு உண்மையான செய்திகள் போல இவை இருந்தன. தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தவர்கள், பொய்யான செய்தியை முதல்பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை திசை திருப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி அதிமுக, அப்படி எங்கள் மீது தவறு இருந்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமே அல்லது வழக்கு தொடர்ந்திருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், தோல்வி பயத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளை நாளிதழ்களில்
4 பக்க விளம்பரமாக அதிமுக வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழக வாக்காளர்கள் தெளிவானவர்கள். எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார். இதுஒருபுறமிருக்க, இது போன்ற விளம்பரங்களை வெளியிட்ட தமிழக நாளிதழ்கள் மீதும் விமர்சன பார்வை முன்வைக்கப்படுகிறது. விளம்பர வருவாயில்தான் பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. அதில்தான் பத்திரிகையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், இதுபோன்ற விளம்பரங்களை தவிர்த்திருக்கலாம் அல்லது அது விளம்பரங்கள் என்று தெரியப்படுத்தும் வகையில் பிரசுரம் செய்திருக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
பணம் கொடுப்பவர் அளிக்கும் எதையும் விளம்பரமாக வெளியிட முடியுமென்றால் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை துறைக்கும் மக்கள் என்ன மரியாதை அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பும் அவர்கள், வகைவகையாக வெளியாகும் போலிச்செய்திகளுக்கு எதிராக ஒட்டுமொத்த உலக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக தினசரி பத்திரிகைகளின் இந்தச் செயலினால் ஊடங்களின் கருப்பு தினம் என்று நேற்றைய தினத்தை சொல்லலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
-பாரூக்.
Comments