பொள்ளாச்சி இரும்பு மார்க்கெட் மூடப்பட்டது..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இரும்பு மார்க்கெட் தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 200 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள வியாபாரி ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து மார்க்கெட்டில் உள்ள மற்ற வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மேலும் 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மேற்பார்வையில் இரும்பு மார்க்கெட் மூடப்பட்டது.
இதையடுத்து மார்க்கெட்டுக்கு செல்லும் 13 பாதைகளையும் நகராட்சி அதிகாரிகள் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மார்க்கெட் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்குவதற்கு வெளியூர்களில் இருந்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இரும்பு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதால் ஒரு வாரத்திற்கு மார்க்கெட் மூடப்பட்டு இருக்கும்.
இதற்கிடையில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments