திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு!! 5 பேர் மீது வழக்குப்பதிவு!!

    -MMH

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. 10 நாள் திருவிழா நடைபெறும்.

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. 

10ஆம் திருநாளன்று நடைபெறும் மஞ்சுவிரட்டை நடத்த அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி இல்லையென எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் மேலூர், தேவகோட்டை, திருச்சி ஆகிய பல ஊர்களிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை, அவற்றின் உரிமையாளர்கள் கண்டரமாணிக்கம் அருகே வெளியாத்தூர் வயல் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் ஆங்காங்கே கட்டுமாடுகளாக  அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டை நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

இதையடுத்து, வெளியாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறை உத்தரவைமீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கண்டரமாணிக்கத்தை சேர்ந்த பிரகாஷ், முருகன், மனோகரன், சுரேஷ், கருப்பையா மற்றும் சுதாகர் ஆகிய 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரனை  மேற்கொண்டு வருகிறார்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments