முழு ஊரடங்கு காலத்தில் எவை இயங்கும்....!!

 

-MMH

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 36000 என்ற அளவில் பதிவானது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை கூட்டி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசுக்கு இரு குழுவினரும் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஒருவார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் எவை இயங்கும்:

1. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்

2. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்

3. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்

4. தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்

5. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6. மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.

7. உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. (Swiggy, Zomato) போன்ற மின் வணிகம்

(e-commerce)மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

8. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.

9. ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

10. வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

11. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

12. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

13. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

14. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

15 அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ( ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலன்கருதி, 22 மற்றும் 23ம் தேதி இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளுக்காக மே 22 மற்றும் 23ம் தேதி மட்டும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்லஅனுமதிக்கப்படுகிறது இதேபோல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை  டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

-பீர் முஹம்மது குருச்சி.

Comments