மாமல்லபுரம் பிடாரி ரதம் பிரதான வாயில் நிரந்தரமாக மூடல்... மது பிரியர்களின் தொல்லையால் நடவடிக்கை.!!

-MMH

       மது பிரியர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதால் மாமல்லபுரம் பிடாரி ரதத்தின் பிரதான நுழைவு வாயிலை மூடி தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரத்தின் எல்லைப்பகுதியில் ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட 2 ரதங்கள் உள்ளன. இவற்றை பிடாரி ரதம் என்று அழைப்பார்கள். 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த 2 ரதங்களும் முற்று பெறாமல் முடிக்கப்பட்ட ரதங்களாகும். இந்த 2 ரதத்திற்கு தெற்கு பகுதியில் வளையான் குட்டை ரதம் என்ற பெயரில் மற்றொரு ரதம் ஒன்றும் உள்ளது.

இந்த 3 ரதங்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல பிரதான நுழைவு வாயில் கருக்காத்தம்மன் கோவிலுக்கு பின்புறம் திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. பிடாரி ரதம் என்று அழைக்கப்படும் இந்த புராதன பகுதியை மாமல்லபுரம் தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வந்தது. ஊர் எல்லைப்பகுதியில் நீண்ட தூரத்தில் உள்ளதால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர மாட்டார்கள். ஆனால் உள்ளூர் மக்கள் பல நேரங்களில் பொழுது போக்குவதற்காகவும், நடை பயிற்சிக்காவும் இந்த புராதன பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

கடந்த 2 வார ஊரடங்கு நாட்களில் மது பிரியர்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் அத்துமீறி உள்ளே சென்று மது அருந்துவதும், பின்னர் போதை தலைக்கு ஏறியதும் மது பாட்டில்களை அங்குள்ள பாறைகளில் உடைத்து கண்ட இடங்களில் சிதறல்களை வீசி இந்த புராதன சின்னத்தை அசிங்கப்படுத்தி விட்டு சென்றனர்.

இதனால் பிடாரி ரதம் புராதன பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்களின் கண்ணாடி துகள்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் அலங்கோலமாக காட்சி அளித்தது. பின்னர் இது குறித்து ஆலோசித்த மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் சமூக விரோதிகளும், மது பிரியர்களும் பிடாரி ரதம் உள்ளே சென்று மது குடிப்பதை தடுக்கும் வகையில் இந்த புராதன பகுதியின் பிரதான வாயிலை பூட்டு போட்டு, வெல்டு வைத்து நிரந்தரமாக மூடி நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் நடைபாதை, சிற்பங்கள் உள்ள பகுதி உள்ளிட்ட புராதன சின்னம் முழுவதும் மது பிரியர்களால் தூக்கி வீசப்பட்டு சிதறி உடைந்து கிடந்த மதுபாட்டில் துகள்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

-வேல்முருகன் சென்னை.

Comments