திருப்பூர் - தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு புகார்..!!

 

-MMH 

      திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு 19 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டும்  முறையான சிகிச்சை அளிக்காமல் கடைசி நேரத்தில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற கூறியதால் தந்தை உயிரிழந்ததாக மகன்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

                                                                    நன்றி பாலிமார் நியூஸ் 

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது தந்தை சுப்பிரமணியம் 62 வயதான இவருக்கு கடந்த 3 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பெருமாநல்லூர் பகுதியில் உள்ள சௌமியா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . 

வேறு இணை நோய்கள் இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஆக்சிஜன் பரிசோதனை செய்யப்பட்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது  இந்நிலையில் நுரையீரலில் 10 சதவீத தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  23ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் இன்னும் சில தினங்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் 24ஆம் தேதி காலை மருத்துவர் ஆக்சிஜன் அதிக அளவு தேவைப்படுவதாகவும், 

தங்கள் மருத்துவமனையில் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு சுப்பிரமணியத்தின் மகன்களிடம் வலியுறுத்தியுள்ளார்.இதனைத் தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு வெண்டிலேட்டர் வசதி தேவைப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுப்பிரமணியம் 25ஆம் தேதி காலமானார். 

இதனிடையே பெருமாநல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த 21 நாட்களிலும் தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வசூலித்து 19 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய விவரங்கள் அளிக்கப்படவில்லை எனவும் குணமடைந்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில் அடுத்தநாளே அபாய கட்டத்தில் இருப்பதாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற கூறியதே சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 

என வலியுறுத்தி சுப்பிரமணியத்தின் மகன்கள் ஹரிஹரன் மற்றும் கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் கட்டியும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்  உண்மை நிலவரங்கள்  பற்றிய விசாரணையின் முடிவை எதிர்நோக்கி  காத்திருக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-குமார் நிருபர் ஊத்துக்குளி.

Comments