'சைபர் க்ரைம்' போலீஸ் உதவியுடன் தகவல் திருட்டு - கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரர் மோசடி அம்பலம் !!

-MMH

         பல்லடம் கார் டிரைவர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை போலீஸ்காரர், 'சைபர் க்ரைம்' போலீஸ் உதவியுடன் மொபைல்போன் தகவல் திரட்டியது அம்பலமாகியுள்ளது.சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பி கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே வந்தபோது மூன்று கார்களில் வந்த நபர்கள் மகேஸ்வரனை கடத்தி சென்றனர். விசாரணையில், தங்கம் கடத்தலில் ஈடுபடும் கும்பல் முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதன்அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கடத்தப்பட்ட மகேஸ்வரன், அவரது நண்பர்கள் இருவர் மற்றும் காரை மீட்டனர்.

தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனரின் கார் டிரைவாக பணியாற்றி வந்த ராஜேஸ்வரன், 27 என்ற போலீஸ்காரரும் ஒருவர்.போலீஸ்காரர் ராஜேஸ்வரன், 'சைபர் க்ரைம்' போலீசார் சிலர் உதவியுடன், மகேஸ்வரனின் மொபைல்போன் அழைப்பு விபரங்கள், இருப்பிடம் போன்ற தகவல்களை எடுத்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதை வைத்து தான் கடத்தல் கும்பல், திட்டம் தீட்டி பல்லடம் அருகே கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.'சைபர் க்ரைம்' போலீசாரில் சிலர், பணத்துக்காக ரகசிய தகவல்களை கசியவிடுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் யார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது.'மிகவும் ஆபத்தான செயல்' போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:'சைபர் க்ரைம்' சம்பந்தமான புகார்கள் சி.சி.டி.என்.எஸ்., அல்லது தேசிய குற்ற ஆவண பிரிவு(என்.சி.ஆர்.பி.,) இணையதளம் வாயிலாகவும், நேரடியாக போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து கொடுப்பதாலும் பெறப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் புகார்களில் சி.ஆர்., எண் பதிவாகியிருக்கும். இதுபோன்று பெறப்பட்ட புகார்களுக்கு மட்டுமே, தேவைப்படும் மொபைல்போன் அழைப்பு மற்றும் குறிப்பிட்ட நபரின் சி.டி.ஆர்.,(வாடிக்கையாளர் விபர அறிக்கை) வழங்கப்பட வேண்டும். அதுவும் போலீசில் அனுமதிக்கப்பட்டுள்ள 'நோடல்' அதிகாரி மூலம் மட்டுமே விபரம் கேட்கப்பட வேண்டும்.' நோடல்' அதிகாரி தவிர வேறு யாருக்கும் இந்த விபரங்களை கொடுக்க கூடாது. ஆனால், இதை மீறி சிலர் தவறான வழிகளில் தகவல் எடுக்கின்றனர்.

இந்த தகவல்களை வைத்து குற்ற செயல்கள் நடக்கின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். தவறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தகவலுக்கு ரூ.10 ஆயிரம்! மொபைல்போன் அழைப்பு விபரங்கள் போன்ற தகவல்களை திருட்டுத்தனமாக எடுத்து கொடுக்க, 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது. 

இவ்வாறு பெறப்படும் தகவல்களை வைத்து கொலை, கடத்தல் போன்ற குற்றங்கள் நிகழ்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் ராஜேஸ்வரன், தங்க நகை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், தங்க நகை கடத்தல் கும்பலுக்கும் இதேபோன்று, தேவையான ரகசிய தகவல்களை எடுத்து கொடுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

-Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்.

Comments