மதுரையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பிரசவம்! மருத்துவ உதவியாளர் - ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

   -MMH 

   மதுரையில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக மதுரை இராசாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மையத்திற்கு செல்வதற்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து, சரண்யாவை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மதுரை வட்டச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரண்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அலறித் துடித்துள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸை சாலையோரத்தில் நிறுத்தி, மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் சரண்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடர்ந்து தாயும், சேயும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் மற்றும் வாகன ஓட்டுநர் இருளாண்டி ஆகியோருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- மதுரை வெண்புலி.

Comments