'தன் மாடு பால் கறக்கவில்லை' என வந்த புகாரால் குழப்பத்திலான போலீசார்!!

   -MMH 

  மத்திய பிரதேசம்: குற்றங்களை விட புகார்கள் சுவாரஸ்யமாகி வரும் காலகட்டம் இது. எதற்காக புகார் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்கிற புரிதல் கூட பலருக்கு இருப்பதில்லை.

குறிப்பாக வடமாநிலங்களில் கல்வி அறிவு குறைவு என்பதால், பல வியப்பான புகார்கள் அவ்வப்போது அங்கிருந்து வரும். அவை நகைப்புக்குரியதாகவும் இருக்கும்.

இதுவும் அப்படி ஒரு வியப்புக்குரிய, நகைப்புரிய புகார் பற்றிய செய்தி தான். தன் மாடு பால் கறக்கவில்லை என போலீசாருக்கு வந்த புகார் தான் அது.  மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ளது நயாகான் என்ற கிராம. அங்கு பாபுலால் ஜாதவ் (45) விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு எருமை மாடு ஒன்று சொந்தமாக உள்ளது.

தனது எருமை தரும் பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். விவசாய இல்லாத நேரத்தில் எருமை தான் பாபுலால் குடும்பத்தை பாதுகாத்து வந்துள்ளது. இதன் காரணமாக எருமையை தன் கண் போல பாதுகாத்து வந்துள்ளார் பாபுலால்.

அதற்கு தீவணம் தருவது, மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது என அனைத்து வேலைகளையும் அவரே முன் நின்று செய்துள்ளார். நன்கு பால் கறவை தந்து வந்த அந்த எருமை கடந்த சில நாட்களாக திடீரென பால் கறக்க மறுத்துள்ளது. நன்று பழக்கமான எருமை மாடு , ஏன் பால் கறவைக்கு மறுக்கிறது என பாபுலால் சந்தேகம் அடைந்தார்.

யாரோ உன் எருமைக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று ஊரார் கொளுத்திப் போட, கொளுந்து விட்டு எரிந்தார் பாபுலால். என்ன செய்வது என தெரியாமல் புலம்பியவர், திடீரென அங்குள்ள காவல் நிலையத்திற்கு ஓடத் தொடங்கினார். அங்கு போலீசாரிடம் சென்று, "அய்யா என் எருமைக்கு எவனோ சூனியம் வெச்சுட்டான். என் மாடு பால் கறக்க மாட்டேங்குது... கிராமம் முழுக்க இது தான் பேச்சு. நீங்க தான் அந்த சூனியக்காரனை கண்டுபிடித்து சூனியத்தை எடுக்கனும்." என புகார் செய்துள்ளார்.

போலீசாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 'சரி போ' என அவரை அனுப்பி வைத்துள்ளனர். புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இன்னும் தனக்கு பதில் வரவில்லை என்று தன் எருமை மாட்டுடன் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கே சென்றுவிட்டார். என்ன செய்வது என்று தெரியாத போலீசார், டிஎஸ்பி அரவிந்த் ஷாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த அவர், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று விவசாயி உதவுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எருமையுடன் பாபுலாலை அழைத்துச் சென்ற போலீசார், எருமை பால் கறக்க உதவியுள்ளனர். சிகிச்சைக்குப் பின் தற்போது எருமை பால் கறக்க உதவுவதாக கூறப்படுகிறது.

-சுரேந்தர்.

Comments