காவல்துறையின் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 6623 பேர் கைது!! குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை!!
தமிழகம் முழுதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவுப்படி போலீசார் நடத்திய ஆப்பரேஷன் கஞ்சா அதிரடி வேட்டையில் கடந்த 20 நாட்களில் 6,623 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா, 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள, 23 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் குறிப்பாக பள்ளி கல்லூரி அருகே நடைபெறுவதை அறிந்தால் பொதுமக்கள் கால தாமதம் செய்யாமல் அவசர காவல்துறை எண் 100, 112 அல்லது அருகிலுள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம். மேலும் www.Facebook.com/tnpoliceofficial என்ற பேஸ்புக் ஐடி, @tnpoliceoffl என்ற ட்விட்டர் ஐடி மற்றும் 9498111191 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
-M.சுரேஷ்குமார்.
Comments