கோலாகலமாக துவங்கியது கோவை விழா!!

   -MMH 
  

  2 ஆண்டுகளுக்கு இடைவெளிக்கு பிறகு கோவை விழா நடைபெறும் நிலையில், கலைப்படைப்புகளின் கண்காட்சியுடன் இன்று விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா நடைபெறாத நிலையில் இவ்வாண்டிற்கான விழா ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கஸ்மோபாலிட்டன் கிளப் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, ஆகியோர் நிகழ்வுகளை துவக்கி வைத்தனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள “ஆர்ட் ஸ்ட்ரீட்” துவக்கி வைக்கப்பட்டது. 

இந்த “ஆர்ட் ஸ்ட்ரீட்”ல் 75 கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப்படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை விழாவினை மக்கள் சிறப்பிக்கும் வகையில் “இண்டராக்டிவ் இஸ்டலேஸன்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இண்டராக்டிவ் இஸ்டலேஸன் என்பது தேவையற்ற நெகிழிகளில் வண்ணம் பூசப்பட்டு அதனை கலைப்படைப்பாக மாற்றும் வகையில் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 14,000 விரல் ரேகைகளைக்கொண்டு உலக சாதனையும் நிகழ்த்தப்படுகின்றது. இதைத்தொடர்ந்து கோவை வாலாங்குளம் குளக்கரையில் இன்று மாலை லேசர் ஷோ ஒளிக்கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது. இதே போல் வருகிற 17ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- சீனி,போத்தனூர்.

Comments