கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை !

   -MMH 

   கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை, மடக்கு குச்சிகள், பிரெய்லி கடிகாரம், சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்பட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்த முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளை கண் டாக்டர், காது, மூக்கு மற்றும் தொண்டை டாக்டர், எலும்பு முறிவு டாக்டர், மன நல டாக்டர் ஆகியோர் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப சான்றிதழ்களை அரசு டாக்டர்கள் வழங்கினர். 

இதையடுத்து முகாமில் பங்கேற்ற 40 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பங்கேற்றவர்களை அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கிய 40 பேருக்கு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். இதுதவிர அவர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-சி.ராஜேந்திரன்,அருண்குமார்.

Comments