அணிலால் நடந்த விபத்தால் 6 பேர் பலி - ஆந்திராவில் அதிர்ச்சி!!

   -MMH 

    ஆட்டோ அருகே வந்ததை பார்த்ததும் பயந்து போன அணில் அப்பகுதியில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது ஏறி அதன் மூலமாக விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தின் சில்லகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த 6 விவசாயக் கூலி தொழிலாளர்கள் காலை விவசாய பணிகளுக்காக ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில் சாலையின் குறுக்கே அணில் ஒன்று ஓடியுள்ளது. ஆட்டோ அருகே வந்ததை பார்த்ததும் பயந்து போன அந்த அணில் அப்பகுதியில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது ஏறியது.

கம்பத்தில் ஏறிய அணில் மின்சார வயர் ஒன்றின் மீது ஏறி அருகிலுள்ள மற்றொரு வயர் மீது தாவியது. அப்போது எதிர்பாராத விதமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்சார வயர் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த கூலி தொழிலாளர்கள் ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஆகியோர் தீயை அணைத்து எரிந்து எலும்புக்கூடாகி போன ஆறு விவசாய கூலி தொழிலாளர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.  

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments