தூத்துக்குடி நெய்தல் திருவிழா - 300க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் களமிறங்க முடிவு..!

-MMH

  தூத்துக்குடியில் நான்கு நாட்கள் நெய்தல் திருவிழா. வஉசி கல்லூரியில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். 300-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் நெய்தல் திருவிழா இன்று துவங்கி வருகிற பத்தாம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து தமிழகத்தின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த திருவிழா நடக்கிறது.

மாபெரும் கலைத் திருவிழாவான இந்த நெய்தல் திருவிழா தூத்துக்குடி வ உ சி கல்லூரி மைதானத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் தினம் தோறும் மாலை 4.30 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். நெய்தல் திருவிழாவை முன்னிட்டும், இந்த விழாவின் சிறப்பினை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள குடியிருப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளாக சுவர்களில் ஸ்பான்சர்கள் மூலமாக ஆர்ட் ப்ராஜெக்ட் குழுவினர் கலை சார்ந்த ஓவியங்களை வரைந்துள்ளனர்.

இதனை கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஓவியங்கள் வரைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, நெய்தல் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில் நடைபெறும் நெய்தல் கலைத்திருவிழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விழாவில், மண் சார்ந்த கலைகள், கிராமியக் கலைகள் என தமிழகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இதுபோக இவ்விழாவில், இசைக்கலைஞர்கள், பாரம்பரிய வாத்தியங்கள் இசைப்பவர்கள் என ஏராளமான கலைஞர்கள், அவரவர் சார்ந்த குழுவினர்கள் மூலமாக பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர். நெய்தல் திருவிழாவின் சிறப்பாக பாரம்பரியம்மிக்க உணவுத்திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்காக மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது

முதல் நாள் நிகழ்ச்சியாக, தூத்துக்குடி அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் பறையாட்டம், தஞ்சாவூர் கலைக்குழுவை சேர்ந்த நையாண்டி மேளத்துடன் கூடிய கரகாட்டம், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஹாஜா மொய்தீன் குழுவினரின் பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் நாள் கலை நிகழ்ச்சி ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடியில் இருந்து, 

-வேல்முருகன்.

Comments