அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! காவல்துறை விசாரணை!!

-MMH

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி 53 வயதான விஜயராணி, இவர் வெள்ளக்கிணர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தற்போது கணவருடன் வசித்து வருகின்றனர். இதனால் விஜயராணி தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் விஜயராணி வீட்டில் இருந்துள்ளார், பின்னர் கணவர் வேலைக்கு சென்ற பிறகு சுமார் 11. 30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரெயில் நிலையம் அருகே சென்று, தனது இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில், மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

அப்போது தண்டவாளம் அருகே சிதறிய நிலையில் கிடந்த விஜயராணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் விஜயராணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமா? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அரசு பள்ளி ஆசிரியை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments