கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்துறையினர் உண்ணாவிரதம் அறிவிப்பு..!

-MMH

கோவை: மின்வாரியத்தில் தொழில்துறையினருக்கு பீக் ஹவர் கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஜவுளி, தொழிற்சாலைகள், சிறு குறு மற்றும்  நடுத்தர தொழில் அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. இந்த கூட்டமைப்பினர் கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் எல்.டி 111பி என்ற மின் இணைப்பை பெற்றவர்கள். எங்களில் பெரும்பாலனோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்.

மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார். ஜெனரேட்டர்கள் இடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் இல்லை.

100 சதவீதம் மின்வாரியத்தை சார்ந்தே தொழில் செய்து வருகின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்த பட்ட மின்கட்டண உயர்வு, டிமாண்ட் சார்ஜ் புதிதாக விதிக்கப்பட்ட பிக்ஹவர் கட்டணத்தினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்து விடும் என, மின்வாரியத்திடமும், ஒழுங்கு முறை ஆணையத்திடமும், துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களை பல முறை நேரில் சந்தித்து கூறியுள்ளோம். 

430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தையும், தொழிலே செய்ய இயலமுடியாத நிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பீக்ஹவர் கட்டணத்தையும் திரும்பப்பெறக் கோரி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 7ம் தேதி கோவை காரணம்பேட்டையில் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 30 சதவீதம் தான் தொழில் நடைபெறுகிறது. ஜி.எஸ்.டி பிரச்சனை, மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.தொழில்கள்  நலிவடைந்துவிட்டன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.  

தமிழக தொழில் நிறுவனங்கள் மற்ற  நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த காலகட்டம் மாறிவிட்டது. தற்போது குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழக  நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலை வந்துவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-சீனி, போத்தனூர்.

Comments