பிராமணர்கள் உயர்ந்தவர்கள் சர்ச்சை பேச்சு..!

பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராணம் சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான். இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர் என்று கூறியிருந்தார். அத்தோடு நில்லாமல் இதுதொடர்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூட அவர் கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா ஸ்ரீவாத்சவா கூறுகையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது. அவர் உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும். ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14வது பிரிவின் படி தண்டனைக்குரியது. ஜாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதா.


                                                                                                                       -MMH


Comments