டில்லி வன்முறையை திசைத்திருப்பவே மத்திய அரசு


டில்லி வன்முறையை திசைத்திருப்பவே மத்திய அரசு, கொரோனா வைரஸ் குறித்த பீதியை மக்களிடம் கிளப்புவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள உயிர்கொல்லி 'கொரோனா வைரஸ்' இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். இதற்கிடையே கொரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், டில்லி வன்முறையை திசைத்திருப்பவே கொரோனா குறித்த பீதியை கிளப்புவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார். மேற்குவங்கம் மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்ற மம்தா பேசியதாவது: இன்று சிலர் கொரோனா, கொரோனா என கத்திக்கொண்டிருக்கிறார்கள். அது பயங்கரமான நோயாக இருந்தாலும், அதுகுறித்து பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும். டில்லி வன்முறை சம்பவத்தை திசைத்திருப்புவதற்காக சில ஊடகங்கள் இதனை மிகைப்படுத்துகின்றன. பாதிப்பு ஏற்படும்போது அந்த தகவலை அறிவியுங்கள். அதேநேரத்தில், டில்லியில் இறந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் இறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் வைரசால் இறந்திருந்தால், ஒரு பயங்கரமான நோயால் இறந்துவிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கும்.


ஆனால் ஆரோக்கியமான மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இதற்கு பாஜ., மன்னிப்பு கூட கேட்கவில்லை. ஆணவத்தைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் கோலி மாரோ (சுட்டுத்தள்ளுங்கள்) என்று சொல்கிறார்கள். உத்தர பிரதேசமும் மேற்குவங்கமும் ஒன்றல்ல என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.                                                                                                                         -MMH


Comments