ரத்தம் கொடுத்து உதவிய போலீஸ் ஊர்-மக்கள் நெகிழ்ச்சி!

   -MMH


              ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் கர்ப்பிணியின் பிரசவ சிகிச்சைக்காக ரத்த தானம் செய்த காவலரை எஸ்.பி. ஜியாவுல் ஹக் பாராட்டினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிபவர் சையது அபுதாஹீர். கடந்த 6-ம் தேதி மணப்பாறை காமராஜர் சிலை அருகே செக்போஸ்ட் பணியில் இருந்தபோது, அவ்வழியாக நடந்து வந்த நிறைமாதக் கர்ப்பிணியான ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுலோச்சனா (25), அவரது கணவர் ஏழுமலை ஆகியோரிடம் சையது அபுதாஹீர் விசாரித்தார்.


அப்போது, பிரசவ சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகவும், 'ஓ பாசிட்டிவ்' ரத்தம் கிடைக்காததால் பிரசவ சிகிச்சைக்குச் சேர முடியாமல் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.


இதைக் கேட்ட அந்தக் காவலர், தனது ரத்த வகையும் 'ஓ பாசிட்டிவ்' எனக்கூறியதுடன், உடனடியாக அத்தம்பதியருடன் மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தார். அதன் மூலம் சுலோச்சனாவுக்கு பிரசவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. தாய்-சேய் இருவரும் நலமாக உள்ளனர்.


மனிதநேயமிக்க இச்செயலை அறிந்த எஸ்.பி. ஜியாவுல் ஹக் ரத்த தானம் செய்த காவலர் அபுதாஹீரை  நேரில் வரவழைத்துப் பாராட்டினார். மேலும் அவருக்கு வெகுமதி அளித்து ஊக்கப்படுத்தினார்.இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு செல்ல, காவலர் அபுதாஹிரை அழைத்து பாராட்டி அவர்களும் வெகுமதி கொடுக்க, பெற்றுக்கொண்ட காவலர் அதன் பிறகு அவர் செய்த காரியம் உண்மையில் பாராட்டக்குரியது. மருத்துவமனைக்கு நேரில் சென்று தனக்கு கிடைத்த பரிசு தொகை ரூபாய் 11000த்தை சுலோச்சனாவின் கணவரிடம் கொடுத்து இதை மருத்துவ செலவிற்கு வைத்து கொல்லுங்கள் என்று பேரின்ப அதிர்ச்சி அளித்து அனைவரையும் ஆச்சிரியப்படவைத்தார். அந்த காவலரை  திருச்சி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.


போலீஸ் என்றாலே ஒருவித அச்சத்தோடு பார்க்கும் சூழலில் இந்த காவலர் செய்த நல்ல செயல் மூலம் ஒட்டுமொத்த காவல் துறைக்கே நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளார். காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வது வெறும் வாய்வார்த்தை கிடையது உண்மை என்று நிரூபித்துள்ளார் அந்த காவலர் அபுதாஹிர்.அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.  



Comments