கோவையில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

             -MMH


கோவை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்:


கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.



தொடர்ந்து முதல்வர் தலைமையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ 165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந நாட்டினார்.


மேலும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும், வாலாங்குளத்தில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை, பொள்ளாச்சி வட்டாரங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், செட்டிப்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சு ணன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


-கிரி,ஈஷா.


Comments