பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும்-கொரோனா தொற்றும்..!
-MMH
இயற்கையோடு இணைந்து வாழ்வதால் கரோனாவை வெல்லும் பூர்வகுடிகள்:
இன்று சர்வதேச பழங்குடிகள் தினம் சர்வதேச பழங்குடிகள் தினம் 1982ம் ஆண்டு முதல் 39 ஆண்டாக ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்பூர்வகுடியினர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது.
உலகெங்கிலும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மற்றும் பழங்குடியின மக்கள் இது தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா,கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கும் சூழலில் "கோவிட் 19 - பழங்குடி மக்களின் மீள்திறனும்" எனும் தலைப்பில் காணொளி கருத்தரங்கமாக மட்டுமே நடைபெறும் சூழல் உள்ளது.
பழங்குடி மக்களின் உரிமைக்கான செயல்பாட்டாளர் ச.தனராஜ் கூறியதாவது:
கரோனா நோயின் தோற்றம் குறித்த ஆய்வு முடிவுகள் இன்னும் முடிவடையாத நிலையில் பூர்வக் குடிகள் சூழல் சீர் கேடுதான் நோய் பரவக் காரணம் என்பதை முன்பே அறிந்து வைத்துள்ளனர். பூர்வகுடிகள் உண்மையில் சூழலியல் நிபுணர்கள் என்பதே உண்மை . அவர்களின் பாரம்பரிய அறிவே இதற்கான சான்றாக இருக்கின்றது. பூர்வகுடி பழங்குடிகள் வாழ்விடத்தில் தான் உலகின் 80 விழுக்காடு உயிர்சூழல் பன்மயம் கொண்டதாக உள்ளது. எனவேதான் சூழலியலை பாதுகாக்க நாம் பூர்வகுடிகளை பாதுகாக்க வேண்டும். இது நமது எல்லோரின் கடைமையாகும். பழங்குடிகள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும் நிலையில் உள்ளனர். அதாவது எதிர்காலத்தில் ஏற்படும் பெரும்தொற்று குறித்தும் நமக்கு சொல்லிக்கொடுக்கும் அறிவுடையவர்கள் பழங்குடி மக்களே! குறிப்பாக பழங்குடியினர் சூழலுக்கு ஏற்ப தங்களை பாரம்பரிய முறையில் தங்களை அமைத்து கொள்கின்றனர். கொரோனா போன்ற பெரும்தொற்றை எதிர்கொள்ளவும், தங்கள் பாரம்பரிய அறிவு, மற்றும் கடந்த கால அனுபவங்களை கொண்டு சுயத்தீர்வை காணும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் நமக்கு இதை நிரூபிக்கின்றனர்.
உலகில் 37 கோடி பூர்வகுடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவு எனினும் வறுமையின் பிடியில் வாழும் மக்களில் 15 சதவீதம் பழங்குடிகளாகவும் உள்ளனர். இவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும் 7 ஆயிரத்திற்கு மேற்பட மொழிகளையும் பேசுகின்றனர். உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். தமிழகத்தில் 36 பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த சுமார் 71/2 இலட்சம் ( ஏழரை ) 1.1 சதவீதம் பேர் வாழ்கின்றனர். பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறைய தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கை சூழலுடன் இணைத்து வாழ்கின்றனர். தங்கள் பாரம்பரிய அறிவை இயற்கையிடம் இருந்தும், மனிதர்களிடமும் பெறுகின்றனர்.
ஆனால், இன்று பழங்குடிகளுக்கான நாள், இன்று பழங்குடிகளுக்கான சிக்கல்கள் அது நம் எல்லோருக்குமான சிக்கல்கள் இயற்கை வளங்களுக்கான சிக்கல் என புரிதல் வேண்டும். பூர்வகுடிகள் இன்று பல்வேறு சவால்களை சந்தித்துகொண்டும் சொல்லொண்ணாத் துயரத்தில் உள்ளனர். இந்த பெரும்தோற்று காலம் எல்லோருக்கும் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக சரியான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய சேவைகள், சுகாதாரம், சுத்தமான குடிநீர், சோப்பு, நோய் தொற்று நீக்கிகள் போன்றவை அனைவருக்கும் எட்டா கனியாக உள்ளது.
மேலும், புதிய கல்வி கொள்கை அறிமுகமாகி உள்ள இத்தருணத்தில் பழங்குடி மாணவர்களின் கல்விக்கு போதிய முக்கியத்துவமும், வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஊரக மற்றும் வனத்தில் வாழும் பழங்குடிகள் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் வாடுகின்றனர். இதற்க்கு தீர்வாக உடனடியாக வனத்தில் வாழும் பழங்குடிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி காடு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பழங்குடியினர் வறுமையில் வாடுவதை தடுக்க வேண்டும். வனத்துறையில் பழங்குடிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே வனத்தின் செழிப்பும் பழங்குடிகளின் வாழ்வும் மேம்படும்.
மேலும் பழங்குடி இளைஞர்கள் வேலை வாய்ப்பை உறுதி படுத்த பழங்குடியினர் பள்ளிகளில் பழங்குடி படித்த பழங்குடி இளைஞர்களை பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவை போன்று அரசு பழங்குடி தன்னார்வலர்களை பணிக்கு அமர்த்தி பழங்குடிகளின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தகுதியுள்ள பழங்குடி இனக்குழுக்களின் நீண்ட வருட கோரிக்கையான பழங்குடி இனக்குழு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பழங்குடியினர் பட்டியல் சீரமைக்கப்படவேண்டும். அதே போன்று தொல்பழங்குடிகளுக்கான பட்டியலில் தகுதியுள்ள காடர், முதுவர், மலைமலசர் உள்ளிட்ட தகுதியுள்ள இனக்குழுவை சேர்க்க வேண்டும். வனம்சார் அனைத்து பழங்குடியினருக்கும் வன உரிமை அங்கீகார சட்டம் 2006ன் கீழ் பாரம்பரிய விவசாய நில உரிமை, குடியிருப்பு உரிமை, பாரம்பரிய சமுதாய வனநில உரிமைகள் அளிக்க வேண்டும். அவர்கள் நீதி வேண்டி வெகு வருடமாக காத்து இருக்கின்றனர்.கிடைக்குமா? எதிர்பார்க்கலாம்!
-மைதீன்,கோவை வடக்கு.
Comments