2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த போத்தனூர் போலீஸ்!!

     -MMH 


2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்!!!!! 


     தங்கச் சங்கிலியைப் பறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரட்டி, 2 மணி நேரத்தில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்ட கோவை போத்தனூர் போலீசாருக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. வயது 20. இவர் சனிக் கிழமை மாலை சுமார் 5.30 மணி அளவில் குறிச்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.


     அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் சர்மிளா கழுத்திலிருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா, சம்பவம் குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீசார் துரித விசாரணையை முன்னெடுத்தனர். சர்மிளா கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் போலீசாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



     இதையடுத்து ரோந்து சென்ற போலீசார் போத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குறிச்சி மின் மயானம் பகுதியில் சிக்கிய அதியமான் (என்ற) நாசர்(25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நாசர் மீது முன்னதாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து நாசரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சர்மிளா கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துச் சென்றது நாசர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவரிடம் உரிய விசாரணை நடத்திய போத்தனூர் போலீசார், திருடு போன தங்கச் சங்கிலியை மீட்டனர். குற்றவாளியைப் பிடித்து திருடுபோன தங்கச் சங்கிலியை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டு விட்டனர்.


     இந்த சம்பவம் குறித்து தகவல் மாவட்ட போலீஸ் கமிஷ்னர் சுமித் சரணுக்குத் தெரியவந்தது. இதையடுத்து சுமித் சரண் போத்தனூர் போலீசாரை வெகு.வாக பாராட்டி மகிழ்ந்தார். இதற்கிடையே பொது மக்கள் உதவியோடுதான் குறிப்பிட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் எனக் கூறப்படுகிறது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments