பாஜக-வுடன் 24 வருட கூட்டணி! வெளியேறியது சிரோமணி அகாலிதளம்..!

      -MMH


வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!'- பாஜக-வுடன் 24 வருட கூட்டணி.வெளியேறியது சிரோமணி அகாலிதளம்.


          வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறுவதாக கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள்,


          வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



               தற்போது தென் இந்தியாவிலும் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலு பெற்று வருகிறது.பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில் சிரோமணி அகாலிதளம் கட்சியும் இடம் பெற்றிருந்தது. மக்களவையில் இரண்டு இடங்களை கொண்ட சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்.


              மற்றொரு உறுப்பினரான அவரின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைசார் பதவியை ராஜினாமா செய்தார். கூட்டணியில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா! - யார் இந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்? முடிவுக்கு வந்த 24 வருட கூட்டணி!


              இந்த நிலையில் சிரோமணி அகாலிதள கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.


              தொடர்ந்து கட்சி சார்பில் இது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுவதை பாதுகாக்க, சட்டப்பூர்வ உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. மேலும் காஷ்மீரில் பஞ்சாபி மொழியை அலுவல் மொழியில் இருந்து விலக்குவது போன்ற பஞ்சாபி மற்றும் சீக்கிய பிரச்னைகள் மீது மத்திய அரசின் தொடர்ச்சியான அக்கறையின்மை காரணமாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.


                  சிரோமணி அகாலிதளம் கூட்டணி சிரோமணி அகாலிதள கட்சி, கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்து வந்தது. 1996 -ம் ஆண்டு ஏற்பட்ட இந்த கூட்டணி, தற்போது வேளாண் மசோதா மற்றும் சில சீக்கிய பிரச்னைகளில் மத்திய அரசின் அக்கறையின்மை காரணமாக முடிவுக்கு வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி நிறுவனர்களில், அகாலிதளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதலும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.


கூட்டணியில் இருந்து விலகும் மூன்றாவது கட்சி!


                    முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக ட்விட்டரில், 3 கோடி பாஞ்சாப் மக்களின் வலியும், போராட்டங்களும் அரசாங்கத்தின் மனதை உருக வைக்கவில்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி, வாஜ்பாய் மற்றும் பாதல் ஆகியோர் கண்ட கனவின் வழியில் இல்லை என்பது உறுதி. ஒரு கூட்டணி கட்சி, அதன் பழமையான கூட்டணி கட்சியின் குரலை கேட்காமலும், தேசத்துக்கே உணவளிப்பவர்களை கண்டுகொள்ளாமலும் இருந்தால், பஞ்சாப் மக்களின் விருப்பத்திலும் இருக்க மாட்டீர்கள்" எனப் பதிவிட்டார்.


                  ஹர்சிம்ரத் கௌர் சிரோமணி அகாலிதள கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் மூன்றாவது கட்சியாகும். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவும் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகி விட்டது குறிப்பிடதக்கது.


-மைதீன்.


Comments