திருப்பூர் அருகே விபத்தில் 4 பேர் பலி-லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து!

        -MMH


திருப்பூர் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம், சிமோஹா மாவட்டம், அரிசனாஹேர் பகுதியை சேர்ந்த மோகன், 29, ஹாலேஷ், 38, பரமேஷ், 42 மற்றும் அப்சல் அலிபைக், 22 ஆகியோர் ஒரு காரில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.


நேற்று காலை 6:00 மணியளவில், திருப்பூரை அடுத்த காங்கயத்தில், சென்ற கார் மீது, மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரி மோதியது. அதேநேரம், ஒரு பைக் மீதும் லாரி மோதியது.காரில் வந்த, மோகன், ஹாலேஷ் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.


காயமடைந்தவர்கள், ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி காரில் சென்ற பரமேஷ், பைக் ஓட்டிய பாலன் ஆகியோர் இறந்தனர். கலைவாணி மற்றும் அப்சல் அலிபைக் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


நள்ளிரவு பயணம் காரணம்நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம், சிமோஹாவில் இருந்து புறப்பட்ட கார், விடிய விடிய பயணித்து தமிழகம் வந்துள்ளது. நேற்று காலை 6:00 மணியளவில் காரை ஓட்டி வந்த அப்சல் அலிபைக் துாக்க கலக்கத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.


நள்ளிரவு பயணங்களை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என, போலீசார் எவ்வளவு வலியுறுத்தினாலும், பலரும் கேட்பதில்லை. ஒரே வேளை, வேறு வழியில்லை என்ற நிலையில், குறிப்பிட்ட கி.மீ.,க்கு ஒருமுறை நிறுத்தி, ஆசுவாசப்படுத்தி கொண்டு இயக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.



நாளைய வரலாறு செய்திக்காக 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments