தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

     -MMH


வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை ஜில்லுன்னு இருக்கும்.. மழை தொடரும்..


     சென்னை: வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இன்றும் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது


     குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்,தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நகரை பொருத்த அளவில் நேற்று காலை முதலே ஆங்காங்கு லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்து வருகிறது.



     நேற்று இரவும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் சற்று தாமதமாக துவங்கும் என்றபோதிலும் பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் பெய்யக்கூடிய மழை இப்போது சென்னையில் பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே சென்னையில் திங்கள்கிழமையான இன்றும் மழை தொடரும் வாய்ப்பு இருக்கிறது.


     புயல் காரணமாக காற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இதுபோல மழை பெய்கிறதாம். இருப்பினும் 2 நாட்களுக்கு மழை ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் பெய்யப்போகிறது.. சென்னைவாசிகள் அடுத்தடுத்து இதமான தட்ப வெட்ப நிலையை அனுபவிப்பார்கள் என்று ஹேப்பி நியூஸ் சொல்கிறார்கள் தனியார் வானிலை ஆய்வாளர்கள்.



      தொடர் மழை காரணமாக சென்னையில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாக இருந்தது. வழக்கமாக இரவு நேரத்தில் பதிவாக கூடிய வெப்ப நிலை இதுவாகும். எனவே மக்கள் இதமான தட்ப வெட்பத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


     சென்னையை பொறுத்த அளவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்


     இதனிடையே தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குளிரான தட்ப வெட்பம் நிலவுகிறது. அங்கு இன்று மதியத்திற்கு மேல் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


-B.செந்தில் முருகன்,சென்னை கிழக்கு.


Comments