ஓடாத மீட்டருக்கு ரூ.91,000 கரண்ட் பில்!! - என்ன செய்தது மின்வாரியம்!!

    -MMH 


                பழுதான மின் மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் பொருத்தப்பட்டபிறகு விதிமுறைப்படி சரியாக கணக்கீடு செய்யாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றச்சாட்டுகளாக பதிவு செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், பதிவு செய்த கணக்கீட்டாளர் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் வினோத் என்பவர் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


               கடந்த மே மாதம் அதிக மின் பளு காரணமாக அவரது தொழிற்சாலைக்கான மின் மீட்டர் எரிந்து போனது. உடனடியாக கருமத்தம்பட்டி பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.பின்னர் புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை மாதக் கணக்ககீட்டின்போது மின் கணக்கீட்டாளர் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் ரூ.91 ஆயிரத்து 935 என கட்டணத்தை பதிவு செய்துள்ளார். இந்த கட்டணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினோத், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு மூலம் சோமனூர் கோட்ட உதவி செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


             இதையடுத்து, எரிந்து போன மீட்டரையும் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மீட்டரையும் ஆய்வகத்துக்கு அனுப்பி அதிகாரிகள் பரிசோதனை செய்தததில், புதிய மின் மீட்டர் முறையாக இயங்கி வருவது தெரியவந்தது. முற்றிலும் எரிந்து போன மீட்டரை ஆய்வு செய்ய இயலாதபோதும், மின் கணக்கீட்டாளர் தவறாக கணக்கீடு செய்து கட்டணத்தை மின்வாரிய கணினியில் பதிவேற்றம் செய்தது கண்டறியப்பட்டது.


            இதையடுத்து, மின் கணக்கீட்டாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறாகக் கணக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக வசூலித்த தொகை வரும் மின் பயன்பாட்டு கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, மின் இணைப்பு தந்தபிறகு மீட்டரில் பழுது ஏற்பட்டால், மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுள்ள நான்கு மாதங்களில் பயன்படுத்திய மின்சார அளவின் சராசரி அடிப்படையில் மின் அளவை கணக்கிட வேண்டும். ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் கணக்கீட்டாளர் மிகையான கட்டணத்தை பதிவு செய்துள்ளார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments