மிஸ்-சி அரக்கனை வெல்லலாம்! மருத்துவர் மகிழ்ச்சி தகவல்!!

     -MMH


     குழந்தைகளைப் பாதிக்கும் மிஸ்-சி நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடைய முடியும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


     இதுபற்றி ஈரோடு சுதா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள், டாக்டர் ரங்கேஷ், டாக்டர் கௌரி சங்கர் ஆகியோர் கூறியதாவது: "கொரோனா பாதிப்பு குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கவில்லை என்ற நிலையில், மிஸ்-சி நோய் குழுந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய் கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று அல்லது நான்கு வாரம் கழித்து வருகிறது.5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அதிகப்படியாகப் பாதிக்கப்படுகின்றனர். 


     மிஸ்-சி-ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ந்து காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு இருக்கும்.உதடு வெடிப்பு, நாக்கு ஸ்ட்ராபெரி பழ நிறத்தில் மாறுதல், உள்ளங்கை மற்றும் பாதம் சிவப்பு நிறமாக இருக்கும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாமல் விட்டால் சிறுநீரகம், கல்லீரல், மூளை என பல உறுப்புகளைச் சேதப்படுத்தும். மேலும் இதயத்தையும் பாதிக்கிறது.


     இந்த நோய்க்கு சிஆர்பி., ஈஎஸ்ஆர்., டீ டைமர், இன்டர் லீயூக்கின் 6 போன்ற ஆய்வுகள் நோய் வீரியத்தைக் கண்டறிய உதவும். மேலும், ஆர்டி- பிசிஆர் மற்றும் ஆன்டிபாடி பரிசோதனைகளும் செய்யப்படும். நோய் வீரியத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த நோய்க்கு ஐவிஐஜி என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. மேலும், மெதில் பிரிட்னிசலோன் என்ற மருந்து கொடுக்கப்படும். கொரோனா தொற்றுக்காகக் கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து பயனளிக்காது.


     தக்க நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பெரும்பாலான குழந்தைகள் குணமடைகின்றனர். எனவே, தொடக்க நிலையிலேயே மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்" என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


-சோலை, சேலம்.


Comments