உத்தமபாளையத்தில் மண்ணில் புதைந்த அங்கன்வாடி மையம்!!

    -MMH


         உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அங்கன்வாடி மையம் மண்ணில் புதைந்து சேதமாகி ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


         உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20-க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு சேவை வழங்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்து குழந்தை மேம்பாட்டுச் சேவை திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதோடு 5 வயது வரையில் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.


      இத்திட்டம் மூலமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அருகேயுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வத்துடன் அனுப்பி வைக்கின்றனர். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர் மூலமாக தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.


       குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வந்து செல்லும் பெரும்பான்மையான அங்கன்வாடி மையங்கள் சுத்தம் சுகாதாரமின்றி ஆபத்தான நிலையில் பழைய கட்டடத்தில் பராமரிப்பின்றி இயங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


       அதன்படி, உத்தமபாளையம் பேரூராட்சியில் தென்னகர் காலனி அங்கன்வாடி மையம் 40 ஆண்டு முன் கட்டப்பட்டது. தற்போது, தரை மட்டத்திலிருந்து சில அடி தூரம் பூமிக்குள் புதைந்து விட்டது. மழைக்காலத்தில் மழை நீர் அங்கன்வாடி மையத்திற்குள் சென்று தேங்கிவிடும் சூழ்நிலையில் இருக்கிறது. மேலும் , கட்டடம் சேதமாகி ஆபத்தான நிலையில் இருப்பதால் சீரமைப்பு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 



நாளையவரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments