குற்றாலத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு..!

 

-MMH

குற்றாலத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்தன. மூன்றாவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக பகல் வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு அதிகரித்து பாதுகாப்பு வளைவு, பாலம் ஆகியவற்றை தாண்டி ஆற்றின் மீது நேரடியாக தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டியது.

92-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, இருபத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது அதனை சற்று நினைவுபடுத்தும் விதமாக நேற்றைய வெள்ளப்பெருக்கு அபாயகரமாகத் தோன்றியது. 

இரவில் வெள்ளம் மேலும் அதிகரித்து பாலத்தின் மீது தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தண்ணீரும் செம்மண் நிறத்தில் கலங்கலாக விழுந்தது. பழைய குற்றாலத்திலும் படிக்கட்டுகள் மற்றும் கார் பார்க்கிங் பகுதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, தண்ணீர் அண்ணா சிலை ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து ஆற்றில் கலந்தது. 

இதையடுத்து இரவு வேளையிலும் தென்காசி கலெக்டர் சமீரன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று வெள்ளைப் பகுதிகளை பார்வையிட்டார். அருவிப் பகுதிக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்து, வெள்ளத்தில் வனப்பகுதியில் கிடந்த சில மரத்தடிகள் அடித்து வரப்பட்டது. ஐந்தருவியில் பாறை ஒன்று விழுந்தது.

 பழைய குற்றாலத்தில் பாறையின் மீது கட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டிடத்தின் தரைப்பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மெயின் அருவியில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. 

இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகள் குற்றாலநாதர் கோவிலுக்குச் செல்லும் பாலம் வரை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அருவிப் பகுதிகள் மற்றும் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் தரைகள் சேதமடைந்தன. அருவிக்கரை பகுதி முழுவதும் கட்டிட இடிபாடுகளும் மர கட்டைகளும் சிதறிக் கிடந்தன. 

காலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலையில் பெரும் வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்தது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டுகிறது. இரவு முழுவதும் கலங்கலாக விழுந்த தண்ணீர் காலையில் தெளிவடைந்து வென்மை நிறமாக விழுந்தது. மொத்தத்தில் நேற்றைய வெள்ளப்பெருக்கு 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சேதத்தை லேசாக நினைவூட்டுவதாக இருந்தது.

-பாரூக் சிவகங்கை.

Comments