பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு!! - பருவமழையால் உற்பத்தி பாதிப்பு!!!

     -MMH

உடுமலை;பருவமழை காலத்தில், பச்சை மிளகாய் உற்பத்தி பாதிப்பால், கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.உடுமலை சுற்றுவட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்தை பயன்படுத்தி தக்காளி, வெங்காயம் உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.இதில், பச்சை மிளகாய் சாகுபடி, பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார், எலையமுத்துார், அந்தியூர் உட்பட பகுதிகளில், கணிசமாக சாகுபடி செய்யப்படுகிறது. களிமண் விளைநிலங்களிலும், செழித்து வளர்ந்து, பச்சை மிளகாய் நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஆண்டுக்கு மூன்று பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டுப்பாத்திகள் அமைத்து ஒவ்வொரு செடிக்கும், 30 செ.மீ., இடைவெளி இருக்கும் வகையில், 30 நாட்களான நாற்று நடவு செய்கின்றனர்.நடவு செய்த, 75 நாட்களில் இருந்து அறுவடை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காய்கள் அறுவடை செய்யப்படுகிறது.வாரத்தில் ஒருநாளும் அல்லது சுழற்சி முறையில் பிரித்துக்கொண்டு தினமும் கணிசமாக அறுவடை செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு குறைந்தபட்சம், 10 முதல், 12 டன் வரைக்கும் காய்கள் கிடைக்கிறது. தற்போது, பருவமழையால், காய்கறி சாகுபடியில், செடிகள் பாதித்து உற்பத்தி குறைந்துள்ளது. பச்சை மிளகாய் வரத்தும், படிப்படியாக குறைந்து வருவதால், கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.விவசாயிகளிடமிருந்து, நேரடியாக, தரத்தின் அடிப்படையில், கிலோ, 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். பச்சை மிளகாய் சாகுபடி குறைவாக உள்ள பகுதிகளில், கூடுதலாக விலை கிடைத்து வருகிறது.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.

Comments