தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்! - சென்னையில் பரபரப்பு!!

   -MMH 

     சென்னை: மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தவரை சென்னை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஆதியம்மாள் (65). இவரது கணவர் ஆறுமுகம் இறந்துவிட்டார். தம்பதிக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் மகேஷ்குமார் (38), மதுரை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

மகேஷ்குமாரின் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, நெற்குன்றத்தில் தனது 2 குழந்தைகளுடன் வீட்டின் கீழ்தளத்தில் மகேஷ்குமார் வசித்து வருகிறார்.

வீட்டின் மாடியில் அவரது தாயார் ஆதியம்மாள் வசித்து வந்தார். மகேஷ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மது அருந்த ஆதியம்மாளிடம் பணம் கேட்டு நச்சரித்தள்ளார். அப்போது, ஆதியம்மாள் சத்தம் போட்டுள்ளார். இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மகேஷ்குமார் அருகில் கிடந்த இரும்பு ராடால் தாயை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

இதில் ஆதியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்குமார் கீழ்தளத்துக்கு சென்று, தூங்கி இருக்கிறார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஆதியம்மாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் முதல் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரவித்தனர். விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்தனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments