லஞ்சப் பணம் கையில்!! போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது...!

-MMH

லஞ்சப் பணத்தைக் கையில் வைத்திருந்தபோது மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கைது! மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அனிதா.

கடந்த 2017ஆம் ஆண்டு, மதுரை திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் அவர் வீட்டின் அருகே உள்ள நல்லதம்பி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு காரணமாக முத்துவிற்கும் அவருடைய மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட முத்து செக்கானூரணி காவல் நிலையத்தில் நல்லதம்பி உள்பட 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நல்லதம்பியைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்பில்லாத தன்னுடைய மகன் மாரி மற்றும் பேரன் கமல் பாண்டி என இருவரையும் குற்றப் பத்திரிகையிலிருந்து நீக்கம் செய்வதற்காக நல்லதம்பி தற்போதைய காவல் ஆய்வாளர் அனிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் ரூபாய் ஒரு லட்சம் பணம் வேண்டும் என அனிதா கேட்டுள்ளார். அதன்பின் இறுதியாக ரூ. 80 ஆயிரம் பணம் தருவதாக நல்லதம்பி ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத்தை வழங்குவதற்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகியுள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நல்லதம்பியிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.

காவல் நிலையத்திற்குச் சென்ற நல்லதம்பி காவல் ஆய்வாளர் அனிதாவிடம் ரூபாய் 30 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு உடனடியாக காவல் நிலையத்தில் நுழைந்து ரசாயனம் தடவிய நோட்டைப் பறிமுதல் செய்து காவல் ஆய்வாளர் அனிதாவை கையும் களவுமாக  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாரூக் சிவகங்கை. 

Comments