கொட்டாம்பட்டி அருகே எரிவாயு குழாய் அமைக்க மக்கள் எதிர்ப்பு...!

-MMH 

கொட்டாம்பட்டி அருகே எரிவாயு குழாய் அமைக்கும் பணியின்போது விவசாய விளை நிலங்களைச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்!

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். அந்த நாற்றானது வளர்ந்து தற்போது பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது.இந்நிலையில்,கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்கம்பட்டி, உடப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, சென்னை எண்ணூரிலிருந்து மதுரை மாவட்டம் கப்பலூருக்கு சுமார் 540 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐஓசி நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும் பணிக்காகக் குழாய்களை அமைத்து வருகின்றனர்.

அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது அலங்கம்பட்டி கிராமத்தில் அளவீடு செய்த அளவை விட அதிகமான நிலங்களிலிருந்த மரங்கள் நாசமாக்கப்பட்டன. தென்னை, மா, கொய்யா போன்ற மரங்களையும் வெட்டிச்சாய்த்தனர். அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களைச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, 'தரிசாக இருந்த இடத்தில் இது போன்ற பணிகள் நடத்தியிருந்தால் கூட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டோம்.

தற்போது விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் இந்தச் சூழ்நிலையில் எங்களது விவசாயத்தை அழித்து குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள்' என்றுஅதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தினர்.இதனையடுத்து கொட்டாம்பட்டி போலீசார்

வரவழைக்கப்பட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நெல்மணிகள் அறுவடை செய்யும் வரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாது என்றும், அதன்பின்னர் முறையாக அளவீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை அடுத்து குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.

-பாரூக் சிவகங்கை. 

Comments