தாழ்த்தப்பட்ட பெண்ணின் பிணத்தை, பொதுப் பாதையில் அனுமதிக்க மறுத்த ஊர் மக்கள்!!

-MMH

தாழ்த்தப்பட்ட பெண்ணின் பிணத்தை, பொதுப் பாதையில் அனுமதிக்க மறுத்த ஊர் மக்களும் போலீசும்!

50 பேர் மீது வழக்குப் பதிவு!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது மேலாயூர் கிராமம். இந்த ஊரில் உள்ள சுடுகாட்டிற்குச் செல்வதற்காக, பொதுப் பாதையில் உள்ள ஒரு கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இந்நிலையில், மேலாயூர் கிராமத்தில் இறந்த தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரின் பிரேதத்தை பாலத்தின் வழியாகக் கொண்டு சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாதி ஆணவம் பிடித்த ஒரு தரப்பினர், பட்டியல் இனத்தவரின் பிரேதத்தை அந்த பொதுப்பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை மானாமதுரையிலிருந்து இளையான்குடி செல்லும் சாலையில் வைத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதேவேளையில், சாதி ஆணவத்தோடு சண்டை போட்டவர்களும் மறுபுறம் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித் நாதன், பட்டியலின மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர், “இறந்து போனவர் உடலை பொதுப்பாதையில் கொண்டு சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். நீங்கள் எப்போதும் கொண்டு செல்லும் பாதையைச் சீரமைத்துத் தருகிறோம், அதன் பின் நிரந்தரமான பாதை செல்வதற்கு வழி செய்வோம்” எனப் பேசினார்.

இதை ஏற்க மறுத்த உயிரிழந்தவரின் உறவினர்கள், “உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினர். இந்தப் போராட்டம் இரவு 11 மணி வரை நடந்தது.

இதற்கிடையே, பட்டியலினத்தவரின் உடலை எடுத்துச் செல்லும் பொதுப்பாதையைத் தடுத்த, மாற்றுச் சமூகத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசாரும், வருவாய்த்துறையினரும் உறுதி அளித்தனர்.

அதன் பின்னர், தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லும் பாதை ஜேசிபி இயந்திரம் மூலம் சரிசெய்யப்பட்டதையடுத்து இறந்த பெண்ணின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் சடலத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்த மாற்றுச் சமூகத்தினர் மீது இளையான்குடி போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ், பெயர் தெரிந்த பெயர் தெரியாத 50பேர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பாரூக்,சிவகங்கை.

Comments