பீதியில் குச்சியை வைத்து சூட்கேசைத் திறந்த போலீஸ்!

 

-MMH

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கல்லணை அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த சூட்கேசிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பலர் இந்த சூட்கேஸ் குறித்து, பலவிதமான வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.

அதன்படி, யாரேனும் கொலை செய்யப்பட்டு சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்து குப்பைத் தொட்டியருகே வீசி சென்றுள்ளனர் என பொய் ஒன்று காட்டுத் தீ போல் அலங்காநல்லூர் பகுதியில் பரவியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், மர்ம சூட்கேஸ் குறித்து வெடிகுண்டு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசாரும் சூட்கேசை பார்த்துப் பீதியடைந்து, ஒரு குச்சியை வைத்து அதைத் திறந்து பார்த்தனர்.

சோதனையில், அந்த சூட்கேசில் இருந்தது வெறும் துணிகள்தான் எனத் தெரியவந்தது. அப்போதுதான் உடல் கிடப்பதாக வதந்தி பரவியுள்ளது எனத் தெரிந்தது. இந்த மர்ம சூட்கேசால் அலங்காநல்லூர் பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.

-பாரூக் சிவகங்கை.

Comments